Thursday, February 18, 2010

காளீசு!!

"இவ்ளோ நேரமாடீ? எப்போ பள்ளிக்கூடம் விட்டுச்சு?இப்ப தான் வர்றவ..." அலுத்துக் கொண்டாள் கிழவி.வீட்டுக்கு போயிட்டு வந்தேன் பெரியாத்தா  என்றாள் காளீசு.என்னத்தயாவது ஒரு காரணம் சொல்லு.சரி சரி தண்ணி நிக்கிறதுக்குள்ள எடுத்து வந்து ஊத்து.நாளைக்கு ஊர்ல இருந்து ஆளுக வர்றாக..." "திருவிழாவுக்கா  பெரியாத்தா..."  என்றாள் காளீசு."ஆமாமா.."ஏற்கனவே தாமசமா வந்துரக்க.. விடு விடுன்னு போய்  எல்லா தொட்டியையும் நொப்பி வை.நாளைக்கு தேவைப்படும்..." குடத்தை எடுத்துக் கொண்டு தெருமுனையில் இருக்கும் குழாயடிக்கு விரைந்தாள் காளீசு .
படிப்பது எட்டாவது.அரசு பள்ளியில்.இவளுக்கு பிறகு 2  தங்கைகள்.அப்பா இல்லை.அம்மா வயல் வேலைக்கு செல்வாள்.இவள் மாலை நேரத்தில் கிழவி வீட்டிற்கு வந்து அவள் சொல்கிற அத்தனை வேலைகளையும் செய்வாள்.மாதம் 200 ரூபாய் சம்பளம். கிழவியின் வீடு தான் நகரத்தின் நிழல் கூட பரவாத அந்த கிராமத்திலேயே  பெரியது.அவள் தான் வசதியானவளும் கூட.பிள்ளைகள் எல்லாரும் படித்து நகரத்தில் செட்டில் ஆகி விட்டனர்.பண்டிகைகள் ,பிற நல்ல நாட்களுக்கு மட்டுமே குடும்பத்தோடு கிழவியின் வீட்டிற்கு வருவார்கள். 
          அடுத்த நாள் காளீசு  வேலைக்கு வரும் போது கிழவியின் வீடு கலகலப்பாய் இருந்தது.ஊரில் இருந்து அனைவரும் வந்து விட்டனர்.பேரபிள்ளைகள் முற்றத்தில் விளையாடிக் கொண்டிருந்தனர். தண்ணீர் குடத்தை தூக்கிக் கொண்டு வந்தாள்.ஒரு பக்க பின்னல் ரிப்பன்  அவிழ்ந்து தொங்கிக் கொண்டிருந்தது. தன் அழுக்கு பாவாடையைத் தூக்கி சொருகிக் கொண்டு உடலை வளைத்து அந்த பெரிய பானையை இடுப்பில் வைத்து கொண்டு வீட்டினுள் வந்தாள்.அங்கே கிழவியின் பேரபிள்ளைகள் வித விதமான பொம்மைகளை வைத்து விளையாடிக் கொண்டிருந்தனர்.குரங்கு பொம்மை,கார் பொம்மை,கிளி பொம்மை என பல பொம்மைகள் இறைந்து கிடந்தன.காலீசின் கண்ணில் பட்டது ஒரு பெரிய பொம்மை.வெள்ளை நிறத்தில் இருந்தது.கூர்மையான மூக்குடன் இரண்டு கைகளையும் அகல விரித்தது போல இரண்டு இ றக்கைகளோடு  இருந்தது.கலர் கலராக லைட்டுகள் எரிந்தன.வினோதமான ஒலி வந்தது.வினோத் கையில் ஏதோ ஒன்றை வைத்து அழுத்திக் கொண்டிருக்க அவன் காட்டிய திசைகளில் எல்லாம் நகர்ந்தது. காளீசு அந்த பொம்மையை விநோதமாக பார்த்துக் கொண்டு நின்றாள்."ஏய் காளீசு.. தண்ணி கொடத்தோட எம்புட்டு நேரம் நிப்ப.. போய் ஊத்திட்டு அடுத்த குடத்த மோந்துட்டு வாடி..." கிழவியின் குரல் கேட்கவும் தண்ணியை ஊற்ற அடுப்பங்கரைக்கு விரைந்தாள்.திரும்பி காலிக் குடத்துடன் மீண்டும் முற்றத்திற்கு வந்தாள்.அவளால் இப்போது ஆவலை அடக்க முடியவில்லை. குடத்தைக் கீழே வைத்து விட்டு  ஒரு தூணை கட்டி கொண்டு அங்கேய நின்று வேடிக்கை பார்க்க தொடங்கினாள்.
          அந்த பொம்மையை பார்க்க பார்க்க அவளுக்கு குதூகலம் பொங்கியது. மாறி மாறி எறிந்த கலர் லைட்டுகள் அவளை பரவசப்படுத்தின. மெல்ல நடந்து வினோத்தின் பக்கம் போய் நின்று கொண்டாள்.
மெதுவாய்... "அண்ணே இந்த பொம்ம பேரு என்ன.." எனறாள்...  வினோத்தின் காதில் அதில் விழவே இல்லை."ஐயோ அவன் பிப்த் தான் படிக்கிறான்.அவன போய் அண்ணன்னு கூப்பிடற..." சிரித்தாள் தீபா.அவளை பார்த்த காளீசு   லேசாய் சிரித்து விட்டு மீண்டும் கேட்டாள் "அது என்ன பொம்ம..." "அதுவா அது ஏரோபிளேன் பொம்ம..." "எரோபிலேனா? அப்பிடினா...." தீபாவுக்கு சிரிப்பு வந்தது."ஏரோபிளேன் தெரியாதா... இது வானத்துல பறக்கும்.பஸ்சு ரோட்ல போகுதுல்ல அது மாதிரி இது வானத்துல போகும்.." கண்கள் அகல விரிந்து விட்டது காளீசுககு."வானத்துலையா...? அம்மாடி....பயமா இருக்காதா...." காளீசின் ஆச்சர்யம் தீபாவுக்கு உற்சாகம் தந்தது.
"ஆமா... வனத்துலதான்.என்ன பயம் .. பழகிட்ட பயம் தெரியாது.நாங்கல்லாம் டெய்லி ஸ்கூலுக்கு எரோபிலேன்ல தான் போவோம்...." "தெனமுமா...?"அசந்து போய் விட்டாள் காளீசு .அந்த பொம்மை அவளை மேலும் வசீகரித்தது.
          அன்று மாலை எரோபிலேனை வேடிக்கை பார்த்து அதனால் கிழவியிடம் திட்டு வாங்கி அதன் பின் பிற வேலைகள் எல்லாவற்றையும் முடித்து வீடு திரும்ப இரவு எட்டு ஆகி விட்டது.அம்மாவும் வீடு திரும்பி இருந்தால்.வீட்டில் அனைவரும் தூங்க தயாராகிக் கொண்டிருந்தனர்.பொதுவாக கிராமங்களில் பொழுது சாய்ந்த உடனே ஊர் அடங்கி விடும்.எட்டு மணி என்பதே அதிகம்.அம்மாவும் வேலையில் அலுத்து சலித்து போய் ஒரு ஓரத்தில் படுத்திருந்தாள். "ஏன்னா புள்ள... இன்னைக்கு இம்புட்டு நேரம் ஆகி போச்சு... சரி சோற போட்டு சாப்டுட்டு படு.உனக்கு வெஞ்சனம் எடுத்து வச்சிருக்கேன்.அதையும் பாத்து எடுத்து சாப்பிடு."சாப்பிட்டுவிட்டு அம்மாவின் அருகில் சென்று படுத்துக் கொண்டாள் காளீசு .
        காளீசுக்கு தூக்கமே வரவில்லை.அந்த ஏரோபிளேன் பொம்மை நினைவாகவே இருந்தது.வானத்தில் பறக்குமாம்.பிரமிப்பு குறையவே இல்லை."அம்மா...இன்னிக்கு பெரியாத்தா வீட்ல பிள்ளைக வந்துருக்காகள்ள அவுக நெறைய பொம்ம வச்சு இருக்கன்கம்மா... அதுல ஏரோபிளேன் நு ஒரு பொம்ம மா.. அது வானத்துல பறக்குமாம். நெசத்துல ரொம்ப ரொம்ப பெருசா இருக்குமாம்...." இவள் பேசிக் கொண்டே இருந்தால்.அவள் அம்மா தூங்கிப் போய் வெகு நேரம் கழித்தே பார்த்தாள் காளீசு  ."சே... தூங்கிருச்சு..." இவள் நினைவுகள் அந்த ஏரோபிளேன்  பொம்மையை சுற்றியே இருந்தன. எப்போது தூங்கினாள் என்று தெரியவில்லை .கனவில் நிறைய எரோபிலேன்கள் வந்தன.பச்சை மஞ்சள் நீளம் என வித விதமான லைட்டுகள் எரிந்தன.மஞ்சள் நிற ஏரோபிளேன் ஒன்றில் காளீசு  தன் பள்ளிக்கு சென்றாள்.அவள் வீட்டுக்குள் குட்டி குட்டி ஏறோபிலேன்கள் பறந்தன.

-தொடரும் (அடுத்த பகுதியில் முடியும்) :)

5 comments:

Prabu M said...

ஏரோப்ளேன் டேக் ஆஃப் சூப்பர்ப் காவ்யா...
ரொம்ப அழகா போயிட்டு இருந்துச்சு.... காளீசு தூங்கிட்ட வரைக்கும் கதை வரலயே... கன்வென்ஷனலா ஒத்த வரி ட்விஸ்ட்ல முடியப் போகுதோனு அப்செட் ஆகுறதுக்கு முன்னால "தொடரும்" கண்ணுல பட்டுருச்சு....

Expecting a great "Landing" friend :)
Waiting for the second and the final part...

Prabu M said...

பதிவைத் தமிழ்மணத்தில் இணைக்கவில்லையா?? அல்லது தமிழ்மணத்தின் கருவிப்பட்டை என் கண்ணில் படவில்லையா??

Anonymous said...

காளீசுக்கு தூக்கமே வரவில்லை----

mm enta padiva padithila erunthu enakum thokam varavey ellai.

avlo supera erunchunga...
apruma
காளீசின் ஆச்சர்யம் தீபாவுக்கு உற்சாகம் தந்தது.
"ஆமா... வனத்துலதான்.என்ன பயம் .. பழகிட்ட பயம் தெரியாது.நாங்கல்லாம் டெய்லி ஸ்கூலுக்கு எரோபிலேன்ல தான் போவோம்...." "தெனமுமா...?"அசந்து போய் விட்டாள் "
ennathu daily schooluku eroplaneliya?????
nanga daily 7km nadantheythan ponom thiruma..."

good,

konjam periya kadhiya eluthunga..

mm..waiting for your final...
episode..

Valga Valamudan...

திருநாவுக்கரசு பழனிசாமி said...

நல்ல நடையில் எழுதியிருப்பதற்கு பாராட்டுக்கள்..
ஆனால் எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவிக்கு விமானம் அறிமுகமாயிருக்கவில்லை என்பது சற்று நெருடலாக உள்ளது.
என்னதான் சிறிய கிராமம் என்றாலும் 'வானம்' பொதுவானதுதானே.?
குழந்தைகளின் உரையாடல் இயல்பாயுள்ளது
இறுதிப்பகுதியை எதிர்பார்க்கிறேன்.

kavya said...

@பிரபு
அடித்த பகுதி போட்டுவிட்டேன்.landing நீங்கள் எதிர்பார்த்த அளவு இருந்ததா என்று நீங்கள் தான் சொல்ல வேண்டும்.விரைவில் சொல்லுங்கள் நண்பரே! தமிழ்மணத்தில் இணைக்கவில்லை.எல்லா பதிவுகளையும் தமிழிஷில் போடுவதோடு சரி.
@complan surya
எல்லா பதிவுகளையும் தொடர்வதற்கு நன்றி.ஒரே சிறுகதையாகவே யோசித்தேன்.அனால் இரண்டு பகுதிகள் வந்துவிட்டது.இந்த நீலமே போதும் என்று நினைக்கிறேன்.என்ன சொல்கிறீர்கள்...? :)
@திருநாவுக்கரசு
நீங்கள் சொல்வதும் சரிதான்.ஆனால் காளீசை போன்ற அப்பாவி சிறுமிகளும் ஏரோபிளேன் கூட தெரியாத கிராமங்களும் நம் தமிழகத்திலே கூட உண்டு என்பதே நான் அறிந்த வரையில் உண்மை.நேர்மையான கருத்துக்களுக்குநன்றி